சிவனும்,பிரம்மாவும்,விஷ்ணுவும் பின்னே நாங்களும்

Wednesday, February 19, 2020



பயணங்கள் பண்டைய‌ நாடோடி வாழ்க்கை முதல் இன்றைய நவீன வாழ்க்கை வரை எதேனும் ஒரு புதிய திறப்பைத் தனி மனிதனுக்குள்ளும், அகண்டுவிரிந்த நாடுகளுக்கும் ஏற்படுத்தியிருக்கின்றன. வாஸ்கோடகாமாவின் பயணம், கொலம்பஸின் பயணம் நாடுகளைக் கண்டுணர உதவுகிறதெனில், தனிப்பட்ட மனிதர்களின் பயணம் அவர்களைப் பற்றிய புரிதலை, அவர்களுக்கே ஏற்படுத்தும் தன்மையானதாகத் திகழ்கின்றன. அதுவும் ஆன்மீகப் பயணமாக அமைந்துவிடும் தருணங்களில் அது உள்ளும் புறமும் ஏற்படுத்தும் மாற்றங்கள், புரிதல்கள் சற்றே அலாதியானவைதான்.
பெரிதாகச் செய்யவேண்டிய வேலைகள் ஏதுமில்லாத ஞாயிறு விடுமுறை நாளில் அத்தகைய பயணம் ஒன்றை, திருச்சி சுற்றுவட்டாரத்திலிருக்கும் சில கோவில்களை நோக்கி தோழிகள் இணைந்து துவங்கினோம்.
அன்று அதிகாலையிலேயே தோட்டத்தின் ஜன்னல் வழியே அகவிய மயிலின் குரல் தூங்காமல் தூங்கி சோம்பிச் சுகம் காணாமல் விரைந்து கிளம்பச் சொல்லியது. அவற்றோடு சிறிது நேரம் அளவளாவி, மரம்,செடிகளிடம் நலம் விசாரித்து, மணம் கமழும் கள்ளிச் சொட்டு பில்டர் காபியை வயிற்றுக்கு வார்த்துக் கொண்டு கை கோர்த்து கிளம்பினோம். வழியில்  அஸ்வின் ஸ்வீட்ஸின் அருமையான மினி டிபன் வயிற்றை நிறைக்க,  போகும் இடத்திலெல்லாம் நம் இருப்பை முத்திரையாக பதித்து விட வேண்டும் என்னும் எழுதப்படாத எங்கள் கொள்கைக்கு ஏற்ப அந்தக் கடையின் தோசை மாஸ்டருக்கு தோசை சுட டிப்ஸ் கொடுத்துவிட்டு ,வண்டி சீறிக் கிளம்பியது திருப்படையூர், திருப்பிடவூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட திருப்பட்டூர் கோவில்களை நோக்கி.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தைக் கடந்து வரும் சிறுகனூர் கிராமத்தின் கிளைச் சாலையில் சுமார் 5கிமீ பயணித்தால் பலசிறப்பு பெற்ற கோவில்கள் அமைந்துள்ள திருப்பட்டூரை அடையலாம். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி உயர்வு தரும் என நம்பிக்கையூட்டிய வள்ளுவரே ஒரு கட்டத்தில் ஊழிற் பெருவலி யாவுள என விதியின் வலிமையைப் பேசுகிறார். அத்தகைய நிலைத்தன்மை வாய்ந்த விதியை எழுதியதாக சொல்லப்பட்ட பிரம்மாவும், ஆதிக்கடவுள் சிவனும் அதனை மாற்றியமைக்கநமக்கு அருள்புரியும் கோவில்களாக இவை சொல்லப்படுகின்றன.
முதலில் சென்றது திருப்பட்டூர் அருகிலுள்ள பாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள அன்னை காசி விசாலாஷி சமேத காசி விஸ்வநாதர் கோவில். 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட கோவில். சாலையோரமாகவே பூஜைப் பொருட்கள் விற்கும் கட்டில் கடைகளும் எளிய மூதாட்டிகள் சிலரும் அன்பாய் வரவேற்றனர். உள்ளே நுழைந்ததும் வியாக்ரபாதர் ஜீவசமாதி. அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்வதால் முன்னோர் ஆசிகள் அனைத்தும் கிடைக்கப்பெறும் எனக் கூறுகின்றனர்.
வியாக்ரபாதர் சிவனின் மீது பேரன்பு கொண்ட முனிவர்.பதஞ்சலி முனிவரின் நெருங்கிய நண்பர்.இவர்கள் இருவருக்கும் இறைவன் சிவனார் தில்லையம்பதியில் திருநடனம் ஆடிக்காட்டியதை புராணம் அழகுற விவரிக்கிறது வண்டு கூட நுகராத மலர்களை அதிகாலையிலேயே சிவனுக்காகப் பறிக்கும்பொருட்டு அச்சிவனருளாலேயே புலிபோன்ற கால்களையும் பார்வையையும் பெற்றவர் வியாக்ரபாதர்
இக்கோயிலின் வரலாறாக சொல்லப்படுவது, வியாக்ரபாதர் காசியிலுள்ள லிங்கத்தைப் போன்றே ஒன்றை பிரதிஷ்டை செய்து கோவில் அருகேயுள்ள கிணற்றிலிருந்து நீர் கொண்டு அபிஷேகித்து வருகிறார். அந்தக் குளம் வற்றிப் போக, நித்திய கர்மத்துக்கு நீர் இல்லாமல் தவிக்கும்போது தேவலோகத்தின் ஐராவத யானை காசியிலிருந்து, கங்கை நீரை அருகிலுள்ள திருஆனைக்கா சிவனின் அபிஷேகத்துக்காக எடுத்துச் செல்கிறது. முனிவரின் வேண்டுகோளை ஏற்காமல் இந்த கோவிலுக்கு சிறிது நீர் தர மறுத்து விடுகிறது. இதனால் கோபம் கொண்ட வியாக்ரபாதர் தன் புலிக்காலால் பூமியை உதைக்கத் தோன்றியதுதான் இந்தக் கோவிலின் தீர்த்தக் குளம்.
காசி விசாலாட்சி அம்மன் கோயிலின் உள்ளே நுழைந்ததும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு வழக்கமாய் நடக்கும் அர்ச்சனைக்கு குங்குமம் வாங்கித் தருவதும், அம்மனுக்கும் சிவனுக்கும் வஸ்திரம் சாற்றுவதும் முக்கிய நேர்த்திக் கடன்கள். இந்தக் கோவிலின் உட்பிரகாரம் ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளதும், அதன் சுற்றுச் சுவர்களில் டைனோசர்,பறவைகள், பலவகைப் பாம்புகளின் சுதை உருவங்கள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலில் வழிபடுவதால் அதுவரை செய்த பாவங்கள், பித்ரு சாபங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
அங்கிருந்து மரங்கள் நிறைந்த சாலையில் 1 கிமீ பயணித்து  பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் சென்றடைந்தோம். விடுமுறை நாளாக இருந்ததாலும், ஐயப்ப சாமிமார்கள், மேல்மருவத்தூர் சக்திமார்கள் சீசனும் சேர்ந்து கொண்டதாலும்  சுற்றுலா பேருந்துகளிலிருந்து இறங்கி சில நூறு பேர்கள் கோவிலுக்குள் சென்றனர்.அவர்களது பெருந்திட்டமிடலில் ஒவ்வொரு கோவிலுக்கும் சில நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டிருந்ததோ என்னவோ சற்று நேரத்தில் கூட்டமனைத்தும் குறைந்து வெகுசிலரே எஞ்சினோம். தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்ட காலத்தியது என கோயில் தலபுராணம் கூறுகிறது. படைப்புத் தொழிலை மேற்கொண்டு வந்த பிரம்மன் ஐந்து தலைகளைக் கொண்டிருந்த காலத்தில் தன்னை சிவனுக்குச் சமமாகக் கருதி அகந்தை கொண்டிருந்த ஒரு தருணத்தில் சிவனால் ஒரு தலை கொய்யப்பட்டு தன் தொழிலை இழந்ததாகவும், இத்தலத்தில் சோடச லிங்கத்தை வழிபட்டதால் சாப விமோசனம் பெற்று பிரம்மாவின் தலையெழுத்து மங்களகரமான‌ வழியில் திருத்தி எழுதப்பட்டதாலும் இத்தலத்தில் வழிபடும் அனைவரது விதியால் படும் துன்பங்களும் குறையும் என கூறப்படுகிறது.
7 திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலில் பிரம்மபுரீஸ்வரரை வணங்கிவிட்டு பிரகாரத்துள் அடியெடுத்து வைத்ததும் தனிச்சன்னதியில் ஆறேகால் அடி உயர‌ பிரம்மாவைக் காணலாம். அட்சமாலை, கமண்டலத்துடன், பத்ம‌ பீடத்தின்மீது காட்சியளிக்கிறார். இங்கிருந்தே குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம் என்பது தனிச்சிறப்பு. எதிரில் உள்ள தூணில் சனீஸ்வரன் சிற்ப வடிவில் அருள்பாலிக்கிறார். மாசாத்தையனாரால் திருக்கயிலாய ஞான  உலா இக்கோயில் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது. அந்த மண்டபம் இன்றும் அதற்கு அடையாளாமாக விளங்குகிறது. அய்யனார் 3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோயிலில் கல்விக் கடவுளாகவும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார். அய்யனார் சிலைகளை காவல் தெய்வமாக ஊரெங்கும் நிறுவும் மரபு இக்கோயில் மூலமாகவே தொடங்கியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.தமிழக அளவில் அய்யனாருக்கு மிகப் பெரிய கற்கோயில் திருப்பட்டூரில் உள்ளது
ஏழாம் தேதியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும் திருத்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலில் பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் ஒளி சிவனின்மீது விழுவதால் நேரடியாக சூரியனே வந்து வணங்குவதாக சொல்லப்படுகிறது. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் சூரிய ஒளி பரவலாக இருக்கும்படி கட்டப்பட்டிருக்கிறது. யோகக் கலையின் ஆதி குருவான பதஞ்சலி முனிவரது ஜீவசமாதி இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்று. முதன்முதலில் வேதம் கூறப்பட்ட கோவில் எனவும் இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
மனதில் நிறைந்திருந்த நம்பிக்கையையும், திருப்தியையும் சுமந்து கொண்டு பயணப்பட்டோம் துறையூர் செல்லும் வழியிலுள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் ஆலயத்தை நோக்கி. ஆதிதிருவெள்ளறை என்றழைக்கப்படும் இக்கோயில் கி.பி 805ம் ஆண்டு முதல் கல்வெட்டுகளின் இடம்பெறுகிறது
கோவிலை நெருங்கும்போதே, முன்னால் வரவேற்றது கட்டுமானம் முடிக்கப்படாத கோபுரம். ஹம்பி அச்சுதராயா கோவில் கட்டமைப்பை ஒத்திருப்பதாகத் தோன்றியது.கோவிலின் உள் நுழைந்ததும் இடப்புறம் செல்லும் பிரகாரத்தின் இருபுறமும் வரவேற்ற மரங்கள் ஏதோ ஒரு நந்தவனத்தில் நுழைந்திருக்கும் எண்ணத்தையே தந்தது சற்றுதூரம் நடந்ததும் மிகப் பெரியதானதொரு ஆலமரம். அதன் பின்புறம் குகைபோன்ற அழகான தூண்களைக் கொண்ட மண்டபம். அதில் மண்டூக முனிவரும், மகாலட்சுமி தேவியும் பெருமாளைக் குறித்து தவம் இருந்த இரு குகைகள் காணப்பட்டன. அம்மண்டபத்தில் எழுப்பபபடும் ஒலி தெளிவாக கோவில் முழுவதும் எதிரொலிக்கும் என கூறப்பட்டது. அந்த அமைதியான இயற்கைச் சூழலில், ஆலயத்தில் ஒலி எழுப்புவது தவறெனத் தோன்றியதால் அதனை சோதித்துப் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டோம்.
சிபிச்சக்கரவர்த்திக்கு வெள்ளைப் பன்றி உருவில் காட்சி தந்ததால் ஸ்வேதபுரி நாதன் என்னும் பெயரும் திருத்தலத்திற்கு ஸ்வேதபுரி நட்சத்திரம் எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய சந்திரர்கள், ஆதிசேசன் முதலியவர்கள் மனித உருவில் வந்து பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்வது தனிச்சிறப்பு. பெரியாழ்வாராலும் திருமங்கை ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்
பாற்கடலின் மகளாகிய ஸ்ரீதேவித் தாயார் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளிடம் பாற்கடலாகிய எனது தாய் வீட்டில்தான் தாங்கள் பள்ளி கொண்டிருப்பதால் எனக்கு முதல் மரியாதை வேண்டும் எனக் கேட்டதன் பொருட்டு இங்கு எழுந்தருளியுள்ளதாகவும் தலபுராணம் கூறுகிறது. இங்கு தாயார்தான் முதலில் சேவிக்கப்படுவார். உற்சவத்தின் போதும் தாயர் பல்லக்குதான் முதலில் செல்லும்.பெருமாள் அரசரூபமாக அரும்பாலிக்கிறார்.
நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். பெருமாள் முத்தங்கி சேவையில் அளித்த காட்சி காண கண் கோடி வேண்டுமென்பது நிதர்சனம்.


இக்கோயிலில் உத்தராயணம் , தட்சணாயனம் என இரு வாசல்கள் உண்டு. உத்தராயண படிகள் வழியாக  தை முதல் தேதி முதல் ஆனி இறுதி நாள் வரையும் தட்சணாயன காலமாகிய மீதமுள்ள மாதங்களில் தட்சணாயணப் படிகள் வழியாகவும், பயணித்து கடவுளை தரிசிக்கலாம்.உத்தராயண தட்சணாயன வாசல்களின் கதவுகளில் பொறிக்கப்பட்டுள்ள தத்ரூப சிற்பங்கள் அப்போதைய மிகச்சிறந்தமரவேலைப்பாடுகளுக்கு பெரும் உதாரணமாக விளங்குகின்றன.
நுழைவாயிலின் பதினெட்டு படிகளும் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களைக் குறிக்கும் . கோவிலின் நுழைவாயிலைக் கடந்தால் பலிபீடம். பலிபீடத்தை கடந்து ஐந்து படிகளைத் தாண்டினால் நாழிகேட்டான் வாசலை அடையலாம். இந்த ஐந்து படிகளும் ஐம்பூதங்களைக் குறிக்கின்றன. இந்த வாசலில் நின்று தான்-  இரவில் வெகு நேரம் கழித்து கோவிலுக்கு திரும்பிய புண்டரி காஷப் பெருமாளை வழிமறித்து ஏன் இவ்வளவு நேரம்? என்று கேட்டாளாம் செண்பகவல்லி.  அதற்காக இப்பெயர் நிலவுகிறது. கோபுர வாசலிலுள்ள நான்கு படிகள் நான்கு வேதங்களைக் குறிக்கும். கோயிலில் இருக்கும் கிணறு பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்றது. இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும். இந்தக் கிணற்றுக்கு அருகில் இருக்கும் ஒரு கல்வெட்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்ற தலைவன் தன் அரசன் நந்திவர்மன் பட்டபெயரான மாற்பிடுகு என்ற பெயரில்  "மாற்பிடுகு பெருங்கிணறு" என்று தோற்றுவித்தான். இது ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதால் ஸ்வஸ்திக் கிணறு என்றே அழைக்கப்படுகிறது
நடக்கும் தொலைவை அளக்கும் ஸ்ட்ராவா நடந்த தூரம் ஏறத்தாழ 3.5 கிமீ எனக் காட்டியது. வழக்கம் போல் வரலாற்றைப் பதிவு செய்யும் சில செல்பிக்களோடு நடந்து வந்து அன்றையதினம் அழகாய் முடிவுற்றது. கோவிலில் நுழைந்த கணம் முதல் ஏதோ ஒரு பழங்கால அரண்மனையில் உலவிக்கொண்டிருப்பதைப் போலவும், பெருமாளின் கருவறை மன்னனின் ராஜசபையாகவுமே மனதினுள் தோன்றி கொண்டிருந்தது. ஆதி திருவெள்ளறை எனக் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயிலை கட்டிய மன்னன் அரூபமாக எங்களோடு பயணித்துக் கொண்டிருந்த உணர்வு நிறைந்திருந்தது என்றால் மிகையல்ல
மனம் நிறைந்திருந்த கணத்தில் சற்றே வயிற்றுக்கும் ஈயப்பட்டது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில் என்பதால் மதிய உணவும் அங்கேயே வழங்கப்பட்டது. கோவிலின் மதில் சுவர்களைக் காணக் கண்கோடி வேண்டும். இத்தனை அருமையானதொரு பிரம்மாண்டத்தை ஆயிரத்துச் சொச்சம் ஆண்டுகளுக்கும் முன்னரே கட்டி எழுப்பியிருக்கும் மனித இனத்தில் பிறந்ததற்கான இருமாப்பும், இந்த பிரம்மாண்டத்தின் முன் நாமெல்லாம் தூசிதானே என்னும் தன்னடக்கமும் ஒருங்கே மனதில் எழுந்து நிரம்பியது. மனிதப் பிறவியின் மாண்பை உணர்ந்த மனத்துடன் இல்லம் திரும்பினோம்


பேரானந்தமாய் ஒரு ஆன்மீகப் பயணம்

Wednesday, February 12, 2020

பிறந்த நொடி முதல் இறப்பை நோக்கி பயணிப்பதே  வாழ்க்கை. அந்த வாழ்வில் குறிப்பிட்ட சில நாட்களை அர்த்தமுள்ளதாகவும, அற்புதமானதாகவும்  மாற்றிக் கொள்ள  உறுதுணையாய்  இருப்பவை பயணங்கள்.
2020ம் ஆண்டின் முதல் வார இறுதி. தொன்மைச் சிறப்பும், ஆன்மீக ஒளியும் நிறைந்திருக்கும் திருச்சியை நோக்கி சனிக்கிழமை காலையில் ஒரு இனிய பயணம் தொடங்கினோம்.
ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றபோது நாங்கள் பயணிக்க வேண்டிய பெட்டி எங்கோ கண்காணாத தொலைவில் தெரிந்தது. வெகுசில நிமிடங்களே நிற்கும் வண்டி என்பதால் வெகுவேகமாக அதை நோக்கி முன்னேறி பெட்டியை ஏறக்குறைய நெருங்கியிருந்த வேளையில், முந்தைய பெட்டியின் முன் நின்றிருந்த டிடிஆர் வெகுஅக்கறையாக "டிரெயின் கிளம்ப போகுது இந்த பெட்டியில் ஏறிக்கங்க" என வழிமறிக்க "அடுத்த பெட்டிதான் எங்களோடது வழிய விடுங்க" என நான் கூறுவதை காதிலேயே கேட்காமல் அவரது கடமையை செவ்வனே ஆற்றியவரோடு ஒரு சிறு கபடியே ஆடி ஒரு வழியாய் ரயில் படிக்கட்டில் கால்வைக்கும் போதே ஊதிட்டாங்க சங்கு.
துள்ளி குதித்துக் கொண்டிருந்த மனம் போலவே ரயிலும் வெகுவேகமாகப் பயணித்து, குறிப்பிட்டதற்கு அரை மணி முன்னதாகவே திருச்சியை அடைந்தது. எங்களுக்காக காத்திருந்த தோழியுடன் இணைந்து சமயபுரம் நோக்கி கிளம்பினோம்.ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் கடந்து போயிருக்க, வண்டி நின்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவாயிலில்.வழிமறித்த சில வியாபாரிகளைத் தாண்டி வரையறுக்கப்பட்ட வழியில் நுழைந்து மெதுமெதுவாய் அம்மனை நோக்கி நகர கருவறையில் ஐந்து தலை நாகத்தை குடையாக கொண்டு அமர்ந்த திருக் கோலத்தில் ,இடக்காலை மடக்கி வலக்காலின் கீழே மூன்று அசுரர் தலைகளை மிதித்துக் கொண்டு கோபாவேசமாகத் தோன்றினாலும், முகத்தில் சாந்தமும் அருளும் நிறைந்தே காட்சி தந்தாள் அன்னை.
700 ஆண்டு காலமாக அமைந்துள்ள இந்த கோவில் உருவாக்கத்தைப் பற்றி சில செவிவழிச் செய்திகள் அறிய முடிந்தது.மாரியம்மன் ஸ்ரீரங்கத்திலிருந்த வைணவி தேவியின் உக்கிரம் தாள முடியாமல் தேவியை காட்டுப் பகுதியில் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போய்விட்டதாகவும்,சோழர் காலத்தில் அந்த அம்மன் கண்ணனூர் மாரியம்மன் என உள்ளூர் மக்களால் ஆராதிக்கப்பட்டு வந்த நிலையில் விஜய நகரப் பேரரசு மன்னனின் தென்னாட்டில் அரசமைக்கும் வேண்டுதலை நிறைவேற்றியதால் இக்கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வேறு சிலர் கூறுவது. இந்த அம்மனது உற்சவத் திருமேனி விஜய நகரப் பேரரசர்களால் வழிபடப்பட்டு வந்தது.அவர்களது தென்னாட்டுப் படையெடுப்பின் போது அவர்களுடனே பயணித்த அம்மன் திருமேனி தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட இடம்தான் இது என்றும் கூறுகிறார்கள்.உண்மையான வரலாற்றை அறிய கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. அங்குள்ள மண்டபத்தின் தூண்களில் நாயக்கர் மன்னர்களின் உருவங்கள் காணப்படுவது, சோழர்காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் இந்த ஊரின் பெயர் குறிக்கப்பட்டிருப்பது, உக்கிரமான இந்த அம்மனை எப்போதும் குளிர்ச்சியாய் வைக்க கருவறையின் உள்பிரகாரத்தில் எப்போதும் நீர் நிரம்பியிருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது என்பவை இச்செவிவழிச் செய்திகளுக்கு ஆதாரமாக சொல்லப்படுகின்றன.
அங்கிருந்து உறையூர் வெக்காளிஅம்மனை நோக்கிய பயணம்.ஏறத்தாழ 30 கிமீ பயணித்த பாதையில்,வாரணபுரீஸ்வரர், அழகிய சிங்கர்,உச்சிப் பிள்ளையார் என எத்தனையோ கோவில்கள் ஆர்வத்தைத் தூண்டினாலும் கடிவாளம் பூட்டபட்ட எங்கள் இயந்திரக் குதிரை வெக்காளி அம்மன் கோவில் வாசலில் போய் நின்றது. உலகின் அத்தனை அழகினையும் தன்னகத்தே கொண்டிருப்பதாக சேக்கிழாரால் பாராட்டப்பட்ட உறையூரின் பெறும்பேறுடைய அழகு வெக்காளி அம்மன்.கோவிலின் நடுநாயகமாக அம்மன், அமர்ந்த நிலையில் தன் நான்கு கைகளிலும் சூலம்,பாசக்கயிறு,உடுக்கை, அட்சய பாத்திரம் ஏந்தி அருள் பாலிக்கிறாள்.
கூரையில்லாக் கருவறையில் மதிய வேளையில்  அம்மனின் பிரகாசமான தோற்றம் உண்மையிலேயே பெரிதாய் கவனம் ஈர்த்தது.
அடுத்த திட்டம் 2500 ஆண்டுகளுக்கு முன் கோச்செங்கட்ச் சோழனால் கட்டப்பட்ட திருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்.கோவில் நடை மூன்று மணிக்குத்தான் திறக்கப்படும் என்பதால் அங்கே போய் பசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் எங்கள் வண்டி பறந்தது.
கோவிலின் வெளிப்பிரகாரத்திலேயே இயற்கை எழில் சூழ்ந்த மண்டபத்தில் அமர்ந்து கொஞ்சமாய்ப் பேசி, அங்கிருந்த கருங்கோழிகளோடு பகிர்ந்து நிறைய சாப்பிட்டு, வரலாற்றைப் பதிவு  செய்யும் முயற்சியில் கோபுரங்களின் அழகை கேமராவில் அடைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த பெரியவர் தமிழர்களின் பழங்காலப் பெருமை,அந்தக் கோவிலின் சிறப்பு, இன்றைய நிலையில் தனக்கான ஆதங்கங்கள் என கொட்டித்தீர்த்ததையும் காதில் போட்டுக் கொண்டு சம்புகேசுவரரை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் அருணகிரி நாதராலும் நாயன்மார்களாலும் பாடப் பெற்ற தலம் இது. பாண்டியர்களாலும் , மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது.இத்தலப் பெருமானை தரிசிப்பதற்காகவே ஸ்ரீரங்கத்தில் பெருமாள் கோவில் கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. நரசிம்மப் பல்லவனது சிங்கத் தூண்கள் கோபுரத்தில் காணப்படுகின்றன.ஐந்து திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலின் 5 ம் சுற்று இறைவனாலே கட்டப்பட்டதாக, திருநீற்றான் திருமதில் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது.லிங்கம் தரைமட்டத்துக்கு சற்று கீழே அமைந்துள்ளதால் கருவறையில் உள்ள ஸ்ரீமத் தீர்த்தம் எப்போதும் வற்றாது விளங்குகிறது. இதனைக் கொண்டு அம்பிகை சிவனை வணங்கியதாகஐதீகம் உண்டு.சிவனின் பஞ்சபூத தலங்களில் இது நீர்த்தலம். சிவனை வணங்குவதற்கு மனிதனின் நவதுவாரங்களைக் குறிக்கும் ஒன்பது துளைகளைக் கொண்டு அதன் வழியாக சிவன் தரிசிக்கப்படுகிறார். மிக குறுகிய வாயில் ஒன்றும் உண்டு.அதன் மூலமும் சுவாமியை தரிசனம் செய்யலாம்.ஐப்பசி பவுர்ணமியில் அனைத்து சிவன் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடக்கும்போது, கருவறை தண்ணீர் நிறைந்திருக்கும் என்பதால் வைகாசிப் பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. உச்சிகால பூஜையின் போது அர்ச்சகர் அம்மன் வேடமணிந்து வந்து சிவனுக்கு பூஜை செய்வார்.இக்கோயிலின் ஈஸ்வரன் அம்பிகையைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை போன்றவை இக்கோயிலில் கிடையாது.
கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் அம்மனின் தோடுகள் மிக விஷேஷம் என அர்ச்சகர் வாயிலாக அறிந்துகொண்டு அதனைப் பற்றிய விவரங்களைத் தேடிய போது அவை அம்மனின் உக்கிரத்தை தாங்கஆதிசங்கரரால் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீசக்கரங்கள் என அறிய முடிந்தது. விளக்கொளியில் அத்தோடுகளுடனான அம்மனின் தரிசனம் வானவீதியின் நட்சத்திர மண்டலத்தின் நடுவே தோன்றும் நிலவைப் போலமின்னியது.
குபேர லிங்கத்தை வணங்கிவிட்டு ஏசு நாதர், மூன்றுகால் முனிவர் போன்ற சிற்பங்களை ரசித்து நிமிர்ந்த நொடியில் தொலைபேசியில் செய்தி வந்தது ஸ்ரீரங்கத்தில் மூலவர் தரிசனம் ஆறு மணிக்கு நிறுத்தப்படும் விரைவில் வாருங்கள் என்று.
அடுத்த சில நிமிடங்களில் 108 திவ்யத்தலங்களில் முதலானது, பஞ்சரங்கத் தலங்களில் முக்கியமானது, யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் இத்தனைச் சிறப்புகளைக் கொண்ட  ஸ்ரீரங்கம் ரங்க நாதப் பெருமாள் ஆலயத்தின் தென்னிந்தியாவின் மிகப் பெரிய ராஜ கோபுரத்தின் முன் ஆஜர்.பஞ்சரங்கத் தலங்கள் எனப்படுபவை காவிரி ஆற்றின் கரையில் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் ஐந்து திட்டுகள் ஆகும்.
பிரம்மாவின் தவ பலத்தால் பாற்கடலில் தோன்றிய விமானம் , விபீஷணனுக்கு ராமனால் பரிசளிக்கப்படுகிறது.அதனை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் காவிரிக்கரையில் கீழே வைக்கப்பட்ட விமானத்தை மீண்டும் பெயர்தெடுக்க விபீஷணனால் இயலவில்லை. அப்போது சோழ மன்னனால் பெருமாளுக்கு கோயில் எழுப்பபபடுகிறது. விபீஷணனை சமாதான்ப்படுத்தும் பொருட்டு இலங்கையை நோக்கி பெருமாள் சேவை சாதிப்பதாக உறுதி கூறுகிறார், இக்கோயில் வெள்ளப் பெருக்கினால் மண்மூடிப்போக அவர்களின் தலைமுறையில் பின்னர் வந்த கிள்ளி வளவன் கிளியின் துணை கொண்டு அக்கோயிலை மீண்டும் கட்டினான். ஆண்டாள்,திருப்பாணாழ்வார், பீபீ நாச்சியார் இவர்கள் அனைவரும் அரங்கனின் திருவடியை அடைந்தது இக்கோயிலிலேயே.

 கோவில் வாசல் கடைகளின் ஸ்படிங்களும், வண்ண வண்ண கற்களும் கண்ணை ஈர்த்தாலும், அவற்றின் விலை ஏதும் பொருத்தமானதாகத் தோன்றாததால் "இப்ப சாமி கும்பிட வந்தமா? ஷாப்பிங் பண்ண வந்தமா?" வாங்க சாமி பார்க்க போலாம்" எனச் சமாளிப்பாய் மனதை சமாதானப்ப்டுத்திவிட்டு கோவில் நுழைவிடத்தில் நின்ற கூட்டத்தைப் பார்த்து மலைத்துத்தான் போனோம்.அங்கே நின்றிருந்த கூட்டத்தினைக் கண்டதும், "வைகுண்ட ஏகாதசி உற்சவ காலத்துல இந்த கூட்டம் இருக்கத்தான் செய்யும். அதனால இன்னிக்கு மூலவரைப் பார்ப்பது ஏறக்குறைய இயலாது.சொர்க்கவாசலிலாவது நுழைந்து வருவோம். இவ்ளோ தூரம் கூப்ட பெருமாள் தரிசனம் குடுக்காம போயிடுவாரா" என நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையேயான ஊசலாட்டத்துடனே கோபுரத்தின் உள்ளே நுழைந்தோம். அங்கே இங்கே சுற்றி சிறப்பு தரிசன வரிசையை எட்டிப் பிடித்ததும் நம்பிக்கை நூல் பலமாகத் தொடங்கியது. வரிசையில் காத்திருந்த நேரத்தில் கோவிந்தா கோஷமும், பெருமாளின் பாசுரங்களும் செவியை நிறைத்தன. சற்றே வேகமாகவும், திடீரென மெதுவாகவும் நகர்ந்த வரிசை பெருமாளின் கருவறையை அடைந்த நேரத்தில்  அத்தனை அழகாய்ப் பெருமாளின் முத்தங்கி தரிசனம். தோளழகா? கண்ணழகா? உடையழகா எதை ரசிப்பதென்றே தெரியாமல் மனம் நிர்மலமான நொடியில் அந்தப் பெருமாளின் உள்ளொளி தரிசனம். சேவிக்க நினைத்திருந்ததனைத்தும் மறந்து பெருமாளே மனதினை ஆட்கொண்டிருந்த நிமிடத்தில் குறையொன்றுமில்லை கண்ணா என எங்கோயோவொரு அலைபேசி ஒலித்தது தற்செயலென்றாலும் பெருமாளின் செயலாகவே கொள்ளத் தோன்றுகிறது.பிரியாவிடை கொடுத்த பெருமாளை கண்ணில் நிறைத்துக் கொண்டு, சொர்க்கவாசலை நோக்கி நடை போட்டன கால்கள். இதற்குமேல் வேறென்ன வேண்டுமென மனம் பூரித்துக் கிடந்த மனதோடு வெளிச்சுற்றில் விற்கப்பட்ட காலண்டர் வடிவில் பெருமாளையும் தாயாரையும் கைகளில் சுமந்து கொண்டு  சொர்க்கவாசலைக் கடந்து போய் புல்தரையில் சற்றே ஓய்வெடுக்க அமர்ந்த நொடியில் காற்றில் வந்தது அந்த அறிவிப்புக் குரல்."மூலவர் தரிசனம் முடிவுற்றது" ஸ்ரீரங்கநாதரே கைப்பிடித்து அழைத்து வந்து சரியான நேரத்தில் தரிசனம் தந்ததான நிறைவும், பெருமிதமும் மனதில் எட்டிப் பார்த்ததென்பது பொய்யல்ல.
ரங்க நாயகித் தாயாரின் திருக்கமலப் பாதங்களில் கொண்டு சென்ற தாமரை மலர்களைச் சேர்ப்பித்து விட்டு ராமானுஜர், கிருஷ்ணன் மற்றும் திருச்சுற்று தெய்வங்கள் எல்லாரின் ஆசிகளோடு ஆயிரம்கால் மண்டபத்தை ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டு  கோவிலின் வெளியே வந்து ஸ்ரீரங்கத்தின் பிரபலமான கல் சட்டிகள், ஐம்பொன் உருவங்கள் என நியாபகார்த்த ஷாப்பிங் பர்ஸை பதம் பார்க்கத் தொடங்கியது.  நிறைந்த மனதோடு வாகனத்தில் ஏறிய பொழுது அந்த நாளும் நிறைவுற்றது.ஓய்வுதேடிய விழிகள் உறக்கத்தின் துணை கொண்டன.