புதிர்கள்

Saturday, February 27, 2010
எனக்கும் யாரையாச்சும் கேள்வி கேக்கணும்ன்னு ஆசை வந்திருச்சி.உங்களையெல்லாம் விட்டா நான் வேற யாரைக் கேக்கமுடியும்? அதனால நானும் புதிர் கேள்விகள் கேட்டுட்டேன். பதில் சொல்லுங்க மக்களே

1.ஒரு நேர்முகத் தேர்வு. '''ஈஸியா 10 கேள்விகள். கஷ்டமா ஒரே ஒரு கேள்வி. எது உங்க சாய்ஸ்?' என்று அதிகாரி கேட்க, இரண்டாவது வாய்ப்பை டிக் அடித்தார் மாணவர். 'கோழியில் இருந்து முட்டைவந் ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?' இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கஷ்டமான கேள்வி. அதற்கு மாணவர் சொன்ன பதில், 'முட்டையில் இருந்துதான் கோழிவந் தது.' உடனே அதிகாரி, 'அது எப்படிச் சொல் றீங்க? கோழி இல்லாம எப்படி முட்டை வரும்?' என்று கேட்க, அதற்கு அந்த மாணவர் பதில் சொன்னவுடன் செலக்ட் செய்யப்பட்டார். அவரது பதில் என்னவாக இருந்திருக்கக் கூடும்?

2.'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?

3.அது ஒரு பிரமாண்ட பாலம். ஆனால், 25 ஆயிரம் கிலோவுக்கு மேல் ஒரு கிராம்கூட அதிகப் பாரத்தைத் தாங்காது. மிகச் சரியாக 25 ஆயிரம் கிலோ எடையுள்ள ஒரு சரக்கு லாரி வேகமாக பாலத்தின் மையப்பகுதியில் போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய பறவை பறந்துவந்து லாரியில் அமர்கிறது. பறவையின் எடை 25 கிராம். ஆனால், பாலம் உடையவில்லை. எப்படி?

4.ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கு ஒன்று எனச் சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. ஆனாலும், கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?

5.அது ஒரு ராயல் கேஸினோ கிளப். உள்ளே கோடிகளில்தான் சூதாட்டம் நடக்கும். அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாஸ்வேர்டு உண்டு. அதைச் சொன்னால்தான், உள்ளேயே விடுவார்கள். அதற்குள் போக ஆசைப்படுகிறார் ஹீரோ. ஆனால், அவரிடம் பாஸ்வேர்டு இல்லை. கேஸினோவின் வாசலில் ஒளிந்திருந்து கவனிக்கிறார். அப்போது ஒரு நபர் வருகிறார். அவரிடம் வாட்ச்மேன், '12' என்கிறார். உடனே வந்தவர், '6' என்று திரும்பச் சொல்ல, உள்ளே போக அவருக்கு அனுமதி கிடைக்கிறது. அதேபோல அடுத்து வந்தவரிடம் வாட்ச்மேன், '6' என்றதும், வந்தவர் '3' என்கிறார். அவரும் உள்ளே போய்விடுகிறார். இதை ஒளிந்திருந்து கவனித்த ஹீரோ, 'இவ்ளோதானா மேட்டர்?' என்று ஸ்டைலாக வாட்ச்மேன் முன்னால் போய் நிற்கிறார். அவர், '20' என்கிறார். நம்ம ஹீரோ, '10' என்கிறார் பெருமையாக. ஹீரோவுக்குத் தர்ம அடி விழுகிறது. ஏன், என்ன தப்பு?

.

கவித்துளிகள் சில‌

Sunday, February 21, 2010
ம‌வுன‌ம்


உனை ம‌றுக்க‌ நினைக்கும் நேர‌ங்க‌ளில்
என‌தான‌ கூரிய‌ ஆயுத‌ம்

உன் ப‌திலுக்கான‌ காத்திருப்பில்
என்னைக் குத்திக் கிழிக்கும் பேராயுத‌ம்


வெயில்



சூரியனின் சுட்டெரிப்பாய் கனன்று

உனை முதலாய்ச் சந்தித்த காலம் என குளிர்ந்து

உன் பிரிவைக் காட்டும் வெம்மையாய் நிலைத்தது


காதல்


எவனோ ஒருவன் எனத் தொடங்கி

என்னவனாயிருக்கலாமே நீ என மாறி

உனக்கானவளாய் நான் நிலைப்பது

.

அண்ணா:‍)

Monday, February 15, 2010


காலை நேர அவசரத்தில்
நாம் சண்டை போட்டதில்லை

கூட்டுக் களவாணித் தனங்களில்
மாட்டிக் கொண்டதில்லை

அப்பா பெண்ணாகவும்,அம்மா பையனாகவும்
போட்டி போட்டதில்லை

ஆனாலும் நீ என் அண்ணனானது எக்கணத்தில்?




பால்யங்களில் எனக்காகப் பாலைப்
பகிர்ந்தளித்த அண்ணாய் நீயில்லை

பள்ளி நாட்களில் விரல் பிடித்து கூட்டிப் போன
வழிகாட்டியாய் நீயில்லை

பதின்மங்களில் பசங்களின் விரட்டலுக்குப்
பாதுகாவலனாய் நீயில்லை

வாழ்வின் ஏதோ ஒரு சிறு நாளில்,
திடீர் நட்பாய் நுழைந்தவன் நீ

ஆணிவேரான‌ அண்ணணாய்ப்
பரிணமித்திருக்கிறாய். இது

போன ஜென்ம பந்தமா,
இல்லை பூர்வ ஜென்மப் பாசமா?

.

ஓடுங்க எல்லாரும்...பிளாஸ்டிக் வருது

Saturday, February 13, 2010
இன்றைய உலகம் கணினிச் சாதனங்களால் நிறைந்து நம் எழுத்துத் தேவைகளைப் பண்மடங்காகக் குறைத்திருக்கிறது எனினும் எழுத்தின் தேவைகளை முழுவதுமாக மறைத்துவிடவில்லை.எழுது பொருட்களில் பலப் பல புதிய தயாரிப்புகள் வந்துவிட்டன. சில வருடங்களுக்கு முன் வரை இங்க் நிரப்பி எழுதும் பேனாக்களே பெரும்பாலும் பயன்படுத்த‌ப்பட்டன.ஒவ்வொரு இங்க் பேனாவும்,குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது பயன்படுத்தப்பட்டது.பள்ளி நாட்களின் இங்க் பேனாக்கள் பெரிய செண்டிமெண்ட் விஷயமாகவும் இருந்தன.இந்தப் பேனா ராசியானது என்னும் எண்ணமோ அல்லது சற்று அதிகமாக இருந்த அதன் விலையோ பேனாவை பத்திரமாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம்மிடையே விதைத்திருந்தன.இப்போது காலப் போக்கில் காணாமல் போகக் கூடிய பொருட்களில் இங்க் பேனாக்களும் சேர்ந்துவிட்டன‌.

இப்போது 2ரூபாய்க்கும்,3 ரூபாய்க்கும் கூட பால்பாயிண்ட் பேனாக்கள் இதற்கான ஒரு காரணமாகி விட்டது.சிறு பிள்ளைகளும் பால்பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.இது பேனாக்களின் மீதான ஒரு அக்கறையின்மையை நம்மிடையே விதைத்திருக்கிறது.

அதிகம் எழுதும் கல்வித் துறையிலிருப்போர், சில நேரங்களில் ஓரிரு நாட்களிலேயே ஒரு பால்பாயிண்ட் பேனாவை உபயோகப்படுத்தி தீர்த்துவிடுகிறோம்.அந்தப் பேனா தீர்ந்தபின், அதைத் தூக்கிப்போட்டு விட்டு புதியதொரு பால்பாயிண்ட் பேனாவைத் தேடுகிறோம்.

எந்த வகைப் பேனாவும் பிளாஸ்டிக் பொருட்களாலேயே தயாரிக்கப் படுகின்றது. நாம் பயன்படுத்தித் தூக்கி எறியும் பேனாக்களும் பிளாஸ்டிக் கழிவுகள்தானே.

பென்சில்களிலும் மைக்ரோடிப் பென்சில்கள் என்பவை பிளாஸ்டிக்கினாலான மேல்புறத்தையே கொண்டிருக்கின்றன.அவற்றின் அழகான மேல்புற டிசைன்கள், நம்மை சாதாரணப் பென்சில்களின் பக்கம் போகவே விடுவதில்லை.அதைப் பற்றி என்றேனும் யோசிக்கிறோமா?


லட்சக்கணக்கானோர் உள்ளடங்கிய கல்வித்துறையில் பயன்படுத்தி கழிக்கப்படும் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு மலைக்கும் அளவிளேயே இருக்கிறது.

அதனால் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்க,இங்க் பேனாக்களைப் பயன்படுத்துவோம்.ஜெல் மற்றும் பால்பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தினாலும், அதன் ரீபில்களை மட்டும் மாற்றி மீண்டும் பயன்படுத்த முயல்வோம்.

பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்போம்.சுற்றுப்புறத்தைக் காப்போம்.

.