கிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி

Friday, February 15, 2019
கிளையிலிருந்து வேர்வரை
ஒரு புத்தகம் நமக்கு தோழனாக, செல்ல எதிரியாக, அன்னையாக, ஆசிரியனாக, குழந்தையாக, காதலாக, தலைவனாக யாதுமாகி நிற்க முடியும் என்பதன் சாத்தியக் கூறுகளில் சந்தேகமிருப்பவர்கள் நிச்சயமாக இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும். ஆம். அட்டைப்படத்திலேயே ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டிய புத்தகம். பேனாவாகிய மரம். பேனா முள்ளின் நுனியை ஆவலோடு எதிர்பார்க்கும் எறும்பு. அந்தப் பேனா நுனியில் தன் வலிகளைத் தீர்க்கும், வழிகாட்டும் எழுத்துக்கள் கசியும் என எதிர்பார்க்கிறதோ.

பக்கங்களைப் புரட்டியதில் கவனம் முதலில் ஈர்த்தது "நீர்த்துப் போகும் சுயம்" முதல் வரி
"அவசியமில்லாத போதும் கூட வன்முறையைப் பிரயோகிக்கும் இனம் மனித இனமாகத்தான் இருக்கமுடியும்.காரணமேயில்லாமல் தரையில் ஊறும் கட்டெறும்புகளை அடித்துக் கொல்லும் நபர் ஒருவர் மனதில் வந்தார். அவரெல்லாம் மனிதனெனப் பிறந்து என்ன பயன் என்னும் *அருவெறுப்பு* மனதில் வந்தது. அந்தக் கட்டுரை நகர நரகத்தில் உழலும் காட்டு ஜாம்பவான்கள் யானைகளின்பொ ருந்தாச் சிக்கலைப் பேசியது. யானைகள் குறித்தும் அவரவர் எதிர் கொள்ளும் சூழலைப் பொறுத்து எண்ணங்கள் மாறும்தானே?
மனிதர்களுக்கு எழும் உணர்வுகள் நிபந்தனைகளுக்குட்பட்டவை. மரணத்தின் திடுக்கிடவைக்கும் நிகழ்வுகளைப் பேசும் அக்கட்டுரை பயத்தை விதைத்தாலும், இறுதியில் அப்போது ஜனித்த குருவிக் குஞ்சின் சூடு இதமளிக்கிறது. அக்குஞ்சு தன் தாயைச் சேரவேண்டும் என்னும் *கருணை* மனதில் பிரவாகிக்கிறது.
அச்சூடு நகர்த்திச் சென்றது. இயற்கையும் வஞ்சித்திடின் என்னும் விவசாயிகளின் ஆதங்கத்தைப் பேசும் கட்டுரையை நோக்கி.
விவசாயிக்கு சிரமப்பட உரிமையுண்டே தவிர "சூழலும் இயற்கையும் சேர்ந்து சதி செய்யும்போது சூழும் புழுக்கத்தில் "இநத வரிகள் மனதில் இனம்புரியா *கோபத்தை* விவசாயத்தின் அருமை உணராமல் நடப்பவர்கள் மீது தூண்டுகிறது.
பாவம் செய்தவர்கள் பலரும் இருப்பதனை நினைவில் மீட்டிய நொடியில் பக்கங்கள் புரட்டப்பட்டு "இந்தப் பாவம் செய்தவர்கள் கை உயர்த்துக" என்னும் கட்டுரையை கண்களில் காட்டின. சாலையில் விர்ரெனப்பறக்கும் பத்து பன்னிரெண்டு வயதுப் பிள்ளைகளின் பெற்றோரின் மீதான *வெறுப்பு* மனதில் முளைத்தது.
அப்படியே கண்கள் தற்காலிக வலி நீக்கி யான "எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி" என்னும் வரிகளை வாசிக்கத் தொடங்கியது.சில நேரம் இக் கேள்வியை நாம் கேட்டிருந்தாலும், நம்மிடம் கேட்கப்பட்டிருந்தாலும் அக்கேள்விக்குப் பின் அம்மனத்திற்கு கிடைக்கும் *அமைதி* யை உணர்ந்ததென்னவோ இக்கட்டுரையை வாசித்தபின்தான். அமைதியான மனம் *ஆனந்தத்தை* உணர்ந்த இடம் அது போதும் எனும் தலைப்பிடப்படட கட்டுரையில் வரும் அனைத்து பூக்களையும் ஒன்றாய்க் கோர்த்த மலர்ச்சியை முகத்தில் கொண்ட மழலையின் துள்ளோட்டம்  மனக்கண்ணில் நிலைத்த கணத்தில்தான்.
ஆனந்த மனதில் வந்து விழுந்தன தேர் நோம்பி யைப் பற்றிய வரிகள். சாதாரணமாய்நினைத்துச் சரளமாய் வலம் வந்து கொண்டிருக்கையில் இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்னும் *ஆச்சரிய* த்தை தருகின்றன கட்டுரையின் இறுதி வரிகளான " மனது நிறைவாக இல்லாதது போல் இருந்துது. நீர்த்துப் போன நிகழ்கால கலப்படச் சுவையும் காரணமாக இருக்கலாம்.
ஈரோட்டின் ஏதோ ஒரு பகுதியில் வாழும் பூங்கொடியும், மலர்க்கொடியும தம் புறச் சூழலை மோதி மிதித்து நடை பயில்வதும், கொடுக்கப்படும் வாழ்வை நமக்கு பிடித்தவாறு மாற்றக் கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் அனைவருக்குமே வழங்கப்பட்டிருக்கிறது  என்னும் வரிகளும் என்னும்  நம் மனதில் பதியவைக்கும் *வீரம்* ஜான்சி ராணியையும், வேலு நாச்சியாரையும், குயிலியையும் நேரில் கண்டிராத நமக்கான வரம்.
நிறக்குமிழிகள் கட்டுரை வரிகளை முகத்தில் குறைந்தபட்ச புன்னகையாவது வராமல் எத்தகைய உம்மணாம்மூஞசிகளாலும் படிக்க இயலாது. இக்கட்டுரை நிகழ்வுகளில் *நகைச்சுவை* க்கு நான் கேரண்டி

நவரசங்களையும் தன்னுள்ளே அடக்கியிருக்கும் நாண்காண்டும் நிரம்பாத சற்றே வளர்ந்த செல்லக் குழந்தை அவள். அவள் தான் கிளையிலிருந்து வேர்வரை.ஆம் அதுதான் அவள் பெயர். ஒருமுறை படித்தாலும் அவர்கள் இதயத்தில் சிம்மாசனமிட்டு சப்பணத்தில் அமர்பவள்

1 comments:

ஸ்ரீராம். said...

"அவசியமில்லாத போதும் கூட வன்முறையைப் பிரயோகிக்கும் இனம் மனித இனம்"

இன்றைய ஜம்மு காஷ்மீர் அமர்ஜவான்கள் நினைவு வருகிறது.

நல்லதொரு அறிமுகம். படிக்கும் ஆவல் வருகிறது.

மொபைலில் தட்டச்சி இருப்பீர்கள் போல... போல்ட் லெட்டர்ஸ் வரவேண்டி நட்சத்திரக்குறி தெரிகிறது!